இன்று தேதி 8-3-2006,ஒரு நல்ல பயணத்தினை எதிர்பார்த்தே இந்தியன் ரயில்வேயின் பயணப்பதிவினை இணையத்தின் மூலம் பதிந்தேன், குவஹாத்தியிலிருந்து புது தில்லிக்கு. தொடர்வண்டி முன்பதிவு நிலையத்திற்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை, இரண்டு மூன்று மணிநேரம் வரிசையில் நிற்கவேண்டிய அவசியம் இல்லை, எல்லாமே உங்கள் மடிக்கணினியிலோ அல்லது மேசைமேலான கணினியிலோ பதிவு செய்து பயணச்சீட்டினையும் தங்கள் பதிப்பானிலேயே அச்சிட்டு எடுத்துக்கொண்டு நேரே தொடர்வண்டிக்குச்செல்லவேண்டியதுதான். உண்மையிலேயே ஒரு புதிய அனுபவம், இந்தியன் ரயில்வேயின் பாராட்டப்படக்கூடிய பல நல்ல முன்னேற்றங்களில் இதுவும் ஒன்று . இப்போது கொட்டுக்கு வருவோம், உண்மையில் என்னை மிகவும் எரிச்சலூட்டியது இதில் வந்த முன்பதிவு செய்யாத பயணிகளே.
மிகவும் கடினமாகப்போனது இந்த முன்பதிவு செய்யாத பயணிகளின் தொல்லையே, மிகவும் அதிகமான அளவிலான பயணிகள் என் பெட்டியிலும் மற்ற பெட்டிகளிலும் ஏறிக்கொண்டு மிகவும் தொந்திரவு செய்துவிட்டனரே???? பயணமே நரகமோ என்ற அளவிற்கு ஆகிவிட்டது, குறிப்பாக வடக்கு மானிலங்களான உத்திரப்பிரதேசம்,பீகார் போன்ற இடங்களில் ( இதை எழுதுவது பரேலி என்ற நகரில் என் தொடர்வண்டி நிற்கும்போது என் மடிக்கணினியிலிருந்து) இந்த தொல்லை அதிகம். இப்போது கூட ஒரு பெண்மனி வந்து உரிமையாக உட்கார்ந்துகொண்டு எழமறுக்கின்றார், என்ன செய்ய? வேதனைக்குறிய விசயம் இதுவே, இதுவே என்போன்ற பல நடுத்தர வர்கத்தினரை தொடர்வண்டி பயணத்திலிருந்து , விலை மலிந்துவரும் விமானப்பயணத்திற்கு மாற்றிவிடுமோ என்ற அச்சத்தினால் இந்த பதிவினை இங்கு இடும் அவல நிலைக்கு என்னைத்தள்ளியது என்று கூறினால் அது மிகையாகாது. வணக்கம், என் மடிக்கணினியில் மின்சேமக்கலன் குறைந்ததால் மீதியை குவஹாத்தி வந்து எழுதுகின்றேன்..
ஒரு விசயம் சபாஷில் எழுதவேண்டியது, மெட்ரோ தொடர்வண்டி ( தில்லியின் உள்ளேயே ஓடும் வண்டி), மிக்க அருமையான விசயம், நம் தமிழகத்திற்கு இது மிகவும் அவசியமே, ஏன் நம் அரசியல்வாதிகள் இதனை எதிர்க்கின்றனர் என்றுதான் தெரியவில்லை. என் பயணத்திட்டத்தின்படி என் தொடர்வண்டியின் புறப்படுநேரம் காலை 8.25மணி, புதுதில்லி ரயில் நிலையம் நான் என் தோழனுடன் சென்றபோது சமயம் 8.10, அங்கு இருந்த ஒரு கண்காணிப்பாளரிடம் விசாரித்தபோதுதான் தெரிந்தது என் தொடர்வண்டி புறப்படுவது பழைய தில்லியிலிருந்து என்று. என்ன செய்வதென்றே புரியவில்லை, கையில் இருந்தது 15 நிமிடங்களே, புது தில்லியிலிருந்து பழைய தில்லிக்கு குறைந்தது 5 முதல் 10 கிமீ இருக்கும், வெளியில் வந்து மூன்றுருளி (ஆட்டோ) ஓட்டுனரிடம் விசாரித்ததில் 200ரூபாய் வேண்டுமாம், கொடுத்துத்தொலைக்கலாம் என்றால், ஆவாத் அசாம் எக்ஸ்பிரஸ் வண்டியை பிடிக்கமுடியாதாம், 25 நிமிடமாவது ஆகுமாம் போக. அப்போதுதான் கடவுள் போல ஒருவர் மெட்ரோ வண்டியை பயன்படுத்தச்சொன்னார், 3 நிமிடத்தில் சென்றுவிடலாம் என்றார், சுத்தமாக நம்பமுடியவில்லை, இருப்பினும் கடைசி முயற்சியாக முயன்று பார்த்துவிட நினைத்து 6 ரூபாய் பயணக்கட்டணம் கொடுத்து பயணச்சீட்டு எடுத்து பாதாள தொடர்வண்டியினை நோக்கிச்சென்றோம், நம்பத்தான் முடியவில்லை. ஓராண்டிற்குமுன்பு சிங்கப்பூரில் சென்ற மோனோரயில் நினைவிற்கு வந்தது. அத்தனை சுத்தம், முழுவது குளிருட்டப்பட்டது, தரையிலிருந்து சுமார் 40அடி ஆழத்தில் செல்லும் தொடர்வண்டி, 3 நிமிடத்தில் பழைய தில்லி வந்தது, ஓட்டமாக ஓடி படிகளில் ஏறினால் எதிரில் பழைய தில்லி தொடர்வண்டி நிலையம், என் வண்டி கண்முன்னே, நம்பமுடியாமல் சென்று என் S2 பெட்டியை அடைந்தேன்.
தொடர்கின்றேன், இன்று மார்ச் 9, என் பிறந்த தினம், இதனை மீண்டும் பதிப்பிக்கின்றேன். உண்மையில் என்னை மிகவும்தொல்லைக்குள்ளாக்கியது என் திரும்பு பயணமே, செல்லும்போது பர்வதார் சம்பர் கிராந்தி தொடர்வண்டியில் சென்றேன், குவஹாத்தியிலிருந்து தில்லிக்கு. மொத்தமே 7 நிறுத்தங்கள், உணவும் அருமை, நன்றாகவே இருந்தது, ஆனால் திரும்புகையில் தெரியாமல் பிக்கானர்-அசாம் ஆவாத் ஆசாம் எக்ஸ்பிரஸ் என்ற வண்டி, ஐயகோ, என் விரோதிக்குக்கூட அந்த வண்டியில் இடம் கிடைக்கக்கூடாது என்றே பிரார்த்திப்பேன். அப்படி ஒரு கொடுமை, பீகார் மானிலத்தில் வண்டி நுழைந்தது, என்ன ஒரு மாயம், வண்டியில் பயணச்சீட்டு பரிசோதகரிலிருந்து அனைவரும் ஊமை செவிடாகிவிட்டனரோ என்ற ஒரு எண்ணம். யாரும் பதிவு செய்யாதவர்களை கண்டுகொள்ளவில்லை, மேலும் அங்கு படித்த படிக்காதவர்களுக்கும் இந்த குடும்பக்கட்டுப்பாட்டில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்றே எண்ணத்தோன்றுகின்றது. ஒரு காவல் பணியில் இரண்டு நட்சத்திர அந்தஸ்து உள்ளவர், மேற்கு வங்கத்து அம்மணியை மணந்திருக்கின்றார், அவர் தலைப்பு திவாரி என்று வருகின்றது, நம்பமாட்டீர்கள் 5 குழந்தைகள் அவருக்கு, ஒரு கைக்குழந்தை, இரண்டு வயது வரும் வயதுடைய பெண் குழந்தைகள், ஒரு 3 வயது நிரம்பிய பெண் குழந்தை, ஒரு 9 வயது நிரம்பிய மகன். இவர்களுக்கு முன்பதிவு செய்யவில்லை அவர், பரேலியிலிருந்து குவஹாத்தி வரை, என் படுக்கையை குழந்தைகளுக்கு தாரை வார்த்துகொடுத்துவிட்டார் பெருந்தன்மையாக
வருத்தமுடன்,
திரு.அஸ்ஸாமிலிருந்து